காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்

காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்…

எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால் என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்… ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்….

எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான்.2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை.எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது.
ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை.காணவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானிற்கு ஆயுத பயிற்சி எடுக்க சென்று விட்டதாக சொல்லலாம்.அது குறித்து விசாரிக்க இவன் கொண்டு வரபட்டிருந்தான்.
பொதுவாக விசாரணைகள் G செல் என்ற ஒரு திக்கான தகர ரூமில் வைத்து நடத்தப்படும்.கதவுகள் அடைக்கபட்டே இருக்கும்.அந்த வாலிபனுக்கும் அதே ரூமில் விசாரணை.சிரித்த முகத்துடன் நாம் தப்பு செய்யவில்லை என்ற தைரியமும்,படபடப்புமாக இருந்தான்.அவனுக்கு காவலாக நான்.
எனது காவல் முடியும் வரை யாரும் விசாரிக்க வர வில்லை.கை விலங்கு இடப்பட்ட நிலையில் சாப்பாடு கொடுக்கும்போதும் இயற்கை அழைப்பின் போதும் மட்டுமே விலங்குகள் அவிழ்த்து விடப்பட்டன.
விசாரணை என்பதை விட அது அந்த ஊரில் வாழும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.ரயில்வேயில் ஒரு கருப்பு நிற தொலைபேசி இருக்குமே அதுதான் இங்கு படு பயங்கரமான ஆயுதமே.அதில் டயல் செய்ய சுற்றும்போது சிறிய அளவில் மின்சாரம் உண்டாகும்.அந்த போனோடு இணைக்கப்பட்ட வயர்கள் அந்த வாலிபனின் ஆணுறுப்பில் இணைக்கப்பட்டது.இப்பொழுது டயல் செய்யும் ஒவ்வொரு முறையும் அவன் ஆணுறுப்பில் பாயும் மின்சாரம் கொடுக்கும் மரண வேதனையை சற்று கற்பனை செய்யுங்கள்.மல வாயில் மிளகாய்த்தூள் இடபட்டதா என்று தெரியவில்லை.ஆனால் அதுவும் நடப்பதுண்டு.

அடுத்த நாளில் நான் வேறு காவலுக்கு சென்ற படியால் மாலை மட்டுமே பார்க்க முடிந்தது.மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.நடக்க முடியாமல் நடந்தான்.அன்று மாலை கமாண்டன்ட் விசாரிப்பதாக அவர் பங்குக்கு வதை செய்தார்.கதவு திறக்கும்போது சார் ஒரே ஒரு தடவை நான் சொல்றதை கேளுங்க என்றபோது நீ சொல்லி நான் கேட்கணுமா என்று முகத்தில் விடப்பட்ட ஒரு அறையில் மூலையில் போய் விழுந்தான்.அழுதுகொண்டே இருந்தான்.ஆறுதலாக பேசி சாப்பாடு கொடுத்து அமைதி செய்தேன்.படிப்பு பற்றி பேசியபோது எனது படிப்புக்காக INGOU வின் PROSPECTUS வாங்கி தருவதாக உறுதி அளித்தான்.
அடுத்த நாள் அவனை விடுதலை செய்தபோது நடக்கமுடியாமல் நடந்து சென்றான்.அவன் வீட்டிலிருந்து பெற்றோர் வந்திருந்தனர்.அவன் அம்மா அழுத அழுகை மறக்கமுடியாதது.அவன் அழுத அழுகையை விட உக்கிரமாக அழுதபடி அழைத்து சென்றனர்.

நான் என் சகாவிடம் நாம் ஒருவனை தீவிரவாதியாக்குகிறோம் என்ற போது அவன் அதற்க்கு இனிமே அந்த ஊரில் எவனும் பாகிஸ்தான் போக மாட்டான்.போனாலும் போகும் முன்னாடி இன்னொருத்தன் நமக்கு சேதி தந்திடுவான் .அதுக்குதான் இந்த அதிர்ச்சி முறை என்றான்.
சில நாட்கள் கழித்து அந்த வாலிபன் நான் வாயிலில் காவல் பார்க்கும்போது INGOU PROSPECTUSகொண்டு வந்து கொடுத்தான்.மேலும் அவன் இதை கொடுக்க பலமுறை வந்ததாகவும் வேறு முகங்களை கண்டு பயந்து திரும்பி விட்டதாகவும் சொன்னான்.அவன் ஊரில் ரோந்து பணிக்கு வந்த என்னை பார்த்ததாகவும் சொன்னான்.நீ அப்பவே என்னிடம் பேசி இத கொடுத்திருக்கலாமே என்றேன்.நீங்க மறுபடியும் பிடிச்சிட்டு போய்ட்டா?சொல்லிவிட்டு சென்று விட்டான்.மறுபடி ஒரு நாளும் பார்க்க வாய்ப்புகள் அமையவில்லை.ஆனால் மறக்க முடியாதவன்.

Source: tamilmottu.blogspot.com
Date: May 11, 2012