பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம்

2009ல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்த போரில்
துணைபோன இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை
திமுக ஆதரித்தால் மன்னிக்கமுடியாத தமிழினத் துரோகம் ஆகும். என தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக்கட்சித் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை
நிறுத்துவதற்கு காங்கிரஸ் தலைமை விரும்புவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, பிராணப் முகர்ஜி தமது நீண்ட நாள் நண்பர்
என்றும் அவரை ஆதரிப்போம் என்றும் கூறியுள்ளார்.

2009ல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்த போரில்
இந்தியாவும் பங்கெடுத்துத் துணை செய்தது. சிங்கள இன வெறி அரசுக்குத் துணையாக
பங்காற்றி தமிழினத்தை அழித்த முயற்சியில் துடிப்பாகச் செயல்பட்டவர்களில்
மலையாளிகளும் வங்காளிகளும் முக்கியமானவர்கள்.

வங்காளத்திலிருந்து இலங்கையில் குடியேறிய விஜயன் வழிவந்தவர்கள் என்று
சிங்களர்கள் தங்களைக் கூறிக் கொள்கின்றனர். வங்காளிகள் தங்கள் பங்காளிகள்என்று
சிங்களவர்கள் கருதுகிறார்கள். அதே போல் இந்திய நாட்டு வங்காளிகளும் சிங்களரைக்
கருதுகிறார்கள்.

நமது இக் கருத்துக்குச் சான்றாக 25.3.2012 அன்று டைம்ஸ் ஆஃப் இண்டியா ஏட்டில்,
ஸ்வப்பன் தாஸ் குப்பதா என்ற வங்காளிப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரை உள்ளது.
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புச் சப்பில்லாத
தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்து அதன் பிறகு அதை இந்தியா ஆதரித்தது.

இதைக் கூட வங்காளி இதழாளர் ஸ்வப்பன் தாஸ் குப்பதாவால் தாங்கிக் கொள்ள
முடியவில்லை. “ஒரு நட்பு நாட்டின் நம்பிக்கைத் துரோகம்“ என்ற தலைப்பில் அவர்
25.3.2012 டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில்,1980லிருந்து 2009 உள்நாட்டுப் போர் முடியும் வரை கொழும்பிற்குப் பயணம்
செய்வது ஒரு மகிழ்ச்சிகரமானதும் அதே நேரம் மனச் சோர்வு தருவதுமான அனுபவம்
ஆகும்.

இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயா வங்களாத்திலிருந்து கடல் மூலமாக இலங்கை
சென்ற வங்காளி என்பதால் இங்கிருந்து கொழும்பு செல்லும் வங்காளிகளைச்
சிங்களவர்கள் மிக்க அன்புடனும் சகோதர பாசத்துடனும் விருந்தோம்புகின்றனர். மனச்
சோர்வு தரும் செய்தி என்னவென்றால் விடுதலைப் புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பு
சுட்டும், குண்டுவைத்தும் சிங்களவர்களைக் கொன்ற சம்பவங்களே.

“பொதுமக்களையும் அவர்களில் பெண்களையும் சிறுவர்களையும் விடுதலைப்
புலிகளிடமிருந்து பிரித்து இனம் காண முடியாது. ஆகவே இறுதிப்போரில்
நாற்பதாயிரம் பேரைக் கொல்லவேண்டி வந்ததும் தவிர்க்க முடியாததே“. என்று
எழுதியுள்ளார் தாஸ் குப்தா.

இதே வங்காளி மன நிலையில் உள்ளவர்தான் நடுவண் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
2009ல் அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அடிக்கடி இலங்கை சென்று வந்தார்.
இலங்கைப் போர் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் இடத்தில் அவர் இருந்தார்.

2009 ல் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை சென்றபிரணாப் முகர்ஜி தமிழீழத்
தேசியத் தலைவர் பிரபாகரனுடன் இருந்த மூன்றரை இலட்சம் மக்கள் தொகையை வெறும் ஒரு
இலட்சத்து எண்பதாயிரம் பேர் என்று குறைத்து அங்கிருந்தே அறிக்கைவிட்டார்.

இலட்சக் கணக்கான மக்கள் இறுதிப்போரில் கொல்லப்படலாம் என்பதை முன்னறிந்து
அப்பொழுது அதை மூடி மறைக்க சதித்திட்டம் போட்டுராஜபட்சே, பிரபாகரனுடன் இருந்த
மக்கள் தொகையை வேண்டுமென்றே குறைத்துச் சொன்னார். அதைஅப்படியே ஏற்று
இலங்கையிலிருந்துபடியே சொன்னவர்தான் பிரணாப் முகர்ஜி.

ஈழத்தில் போரை நிறுத்தவில்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி
விலகுவார்கள் என்ற ஒரு நாடகத்தை கருணாநிதி நடத்தினார். அந்த நாடகத்தை முடித்து
வைக்க சென்னை வந்தவர் இதே பிரணாப் முகர்ஜி. கருணாநிதியைச் சந்தித்துவிட்டு
அவரது வீட்டிலிருந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜியை செய்தியாளர்கள் சூழ்ந்து
கொண்டு போர் நிறுத்தம் வருமா என்று கேட்டபோது நாங்கள் போர் நிறுத்தம்
கோரவில்லை. (We are not for ceasefire) என்று அறிவித்தார்.

அத்துடன் இனிமேல்இலங்கை அரசுக்கு ஆயுதம் தரமாட்டீர்களே என்று செய்தியாளர்
கேட்டதற்கு இந்தியாவின் தென்பகுதியில் நாம் சில அமைப்புகளை நிறுவியுள்ளோம்.
(Wehave some installations) அவற்றைப் பாதுகாக்க இலங்கை அரசுக்குச் சில
போர்க்கருவிகளைத் தரவேண்டியுள்ளது என்றார்.

அடுத்து சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் இனிமேலும் பயிற்சி தரப்படுமா என்று
செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல நாட்டு இராணுவத்தினர் இந்தியாவில் பயிற்சி
பெறுகிறார்கள், இந்திய இராணுவ வீரர்களும் பல நாடுகளில் பயிற்சி பெறுகிறார்கள்.
அதைப் போல் இலங்கை இராணுவ வீரர்களும் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள் என்று
பதில் சொன்னார்.

டைம்ஸ் ஆஃப் இண்டியா கட்டுரையாளர் ஒளிவு மறைவின்றி சிங்கள இனவெறியை வங்காளி இன
உணர்ச்சியாகப் பாசத்தோடு கூறியிருக்கிறார். அதே உணர்வோடுதான் பிரணாப் முகர்ஜி
செயல்பட்டார். செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே இப்படிப்பட்ட தமிழினப் பகைவராகவும் சிங்கள இனப்பங்காளியாகவும் செயல்பட்டு
ஈழத் தமிழர் பேரழிவுக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி
குடியரசுத் தலைவர் ஆவதற்குத் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆதரவுதரக் கூடாது.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதற்கு வாக்களித்தால் அது மன்னிக்க
முடியாதத் தமிழினத் துரோகம் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இன
உணர்ச்சியோடும் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த இன அழிப்பை நினைவுகூர்ந்தும்
பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க
வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்
கொள்கிறேன்.

பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சென்னை