தமிழகத்திலும் தலையெடுக்கும் சிறிலங்கா அரசின் பயங்கரவாதம்! தமிழக அரசு உடந்தையா…!!?

காஞ்சி மக்கள் மன்றம் என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ,பின்தங்கிய வகுப்பு மக்களுக்கு பெண்களால் நடத்தப்படும் ஒரு சேவை அமைப்பாகும். இதன் தலைவி மகேஷ் அவர்கள் ஆவார். இவர்கள் பல சமுதாய விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன் இன்னுயிரை ஈந்த செங்கொடி என்ற பெண் இந்த காஞ்சி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கொடி கிராமத்தில் அமைந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்திற்கு 27-04-12 அன்று காலை 9.50 க்கு ஒரு நான்கு சக்கர வண்டி வந்தது (நீல நிற ஸ்கார்பியோ பதிவு எண் 6 CC 3966). இது தொடர்ந்து அவர்களின் இல்லங்களை புகைப்படம் எடுத்தது… அதை கவனித்த காஞ்சி மக்கள் மன்றத்தினர் அருகே சென்று விசாரிக்கும் முன்பு வேகமாக சென்று விட்டது…வாகனத்தை வேகமாக பின்னுக்கு எடுத்துச் செல்லும் போது அங்கிருந்த 10 வயது சிறுவனை திட்டதிட்ட உரசி சென்றது அந்த வாகனம். மயிரிழையில் சிறுவன் உயிர் தப்பினான்.

இந்த வாகனத்தை உடனே மக்கள் மன்றத்தை சேர்ந்த இரண்டு பேர்கள் தங்கள் இருசக்கிர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். ஆனால் அந்த வாகனமோ 100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சென்றது. காஞ்சிபுரம் ஊரை அடையும் வேளையில், இருசக்கிர வண்டியில் வந்த இளைஞர்கள் ஸ்கார்பியோ வாகனத்தை வழிமறித்தனர். ஒரு இளைஞர் கீழ இறங்கி, அந்த வாகனத்தின் முன் கதவை திறக்க முயன்றார். அப்போது உள்ளே இருந்த வாகன ஓட்டி இளைஞரை எட்டி உதைத்து விட்டு மீண்டும் வாகனத்தை பின்னுக்கு ஒட்டி வேறு வழியாக அதி பயங்கர வேகத்தில் ஓட்டிக்கொண்டு சென்றார். அதன் பிறகு அந்த வாகனம் தென்படவில்லை. இந்த வாகனத்தின் எண்ணை விசாரித்த போது அது இலங்கை தூதரகத்திற்கு சொந்தமானது என்று தெரிந்தது… தூதரக வண்டியை காவல்துறை சோதனையிடவோ, தடுக்கவோ முடியாது என்கிற காரணத்தினால் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது..இந்த வாகனம் இலங்கை தூதரகத்திற்கு சொந்தமான வண்டி தான் என்று தூதரகத்தில் உள்ளவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து காஞ்சி மக்கள் மன்றம் காவல் துறையில் புகார் பதிவு செய்துள்ளனர். ஆனால் இது குறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் தமிழகத்திலும் இலங்கையின் உளவுத்துறை செயல்பாடு அதிகரித்து இருக்கிறது, உணர்வாளர்கள் செயல்பாட்டாளர்கள் மீது நேரடியாக மிரட்டலும் தாக்குதலும் நடத்தவும் கூடும் என தெரிகிறது. தமிழக காவல்துறை, உளவுத்துறை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது இதன் மூலமாக தெளிவாக தெரிகிறது… அண்டை நாட்டு உளவுத்துறை இங்கு சுதந்திரமாக செயல்பட எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்பது புரியவில்லை..

இலங்கை தூதரகம் தமிழக காவல் துறை அனுமதி இல்லாமல் இப்படி உளவு பார்க்க முடியாது. ஆகவே காவல் துறையில் பங்கு இதில் உள்ளதாகவே சந்தேகிக்கப் படுகிறது. மேலும் உளவு பார்க்க வந்தவர்கள் இப்படி நேரடியாக அவர்கள் வாகனத்தில் வர மாட்டார்கள். இவர்கள் காஞ்சி மக்கள் மன்றத்திற்கு வந்தது இங்குள்ள ஒருவரை தாக்குவதற்கு தான் என்று மக்கள் மன்றத்தின் தலைவி மகேஷ் நமக்கு தெரிவித்தார். அதனால் இது ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. காஞ்சி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு எதாவது ஆபத்து நேர்ந்தால் அது தமிழக காவல் துறையையே பொறுப்பேற்க வேண்டும் என்பதே மக்கள் மன்றத்தினர் கருத்தாகும். இது போன்ற செயல்களை தமிழக அரசோ அல்லது காவல்துறையோ இனி ஊக்குவிக்கக் கூடாது.