தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்தத்தை இயக்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்த இந்திய அரசின் அமைச்சரவையில் பங்கு ஏற்று உடந்தையாகச் செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
